வெறுக்கத்தக்கப் பேச்சுக்களை அழிக்க இதனை செய்ய வேண்டும்! - இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
கலாச்சாரங்களை மதிப்பதன் மூலமும் மதங்களுக்கான உரிமைகளை முறையாக வழங்குவதன் மூலமும் நிச்சயமாக வெறுக்கத்தக்கப் பேச்சுக்களை இந்த நாட்டிலிருந்து அழிக்க முடியும் என இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் எம்.எச்.எம்.அஸீம் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
கௌரவ சபாநாயகர் அவர்களே, இலங்கையின் ஐந்தாவது இளைஞர் நாடாளுமன்றத்தில் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது.
இளம் தலைமுறையின் குரலைத் தேசிய மட்டத்திற்கு உயர்த்தி சிறந்த வெளியீடுகளை உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் நிலைபேறான அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும்.
இந்த உயரிய சபையில் ஓர் வாய்ப்பினை வழங்கிய இறைவனுக்கு முதற்கண் நன்றியைக் கூறிக்கொள்வதோடு வாக்களித்த இளைஞர்கள் மற்றும் தேர்தல் காலத்தில் உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களையும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்தி மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இன்று எமது நாடு எதிர்கொண்டிருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினையான வெறுக்கத்தக்கப் பேச்சு (Hate speech) உலாவருகின்ற இந்த கலாச்சாரத்தை முற்று முழுதாக அழிப்பதன் மூலம் எதிர்காலத்தில் பல்லின மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழமுடியும். இவ்வாறான சூழ்நிலையை உருவாக்குவதற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும்.
மதங்கள், கலாச்சாரங்கள் என்பன ஒவ்வொரு இனத்துக்கும் வேறுபடுகின்றது. கலாச்சாரங்களை மதிப்பதன் மூலமும் மதங்களுக்கான உரிமைகளை முறையாக வழங்குவதன் மூலமும் நிச்சயமாக வெறுக்கத்தக்கப் பேச்சுக்களை (Hate speech) இந்தநாட்டிலிருந்து அழிக்க முடியும்.
நிலைபேறான அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு இளைஞர் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களும், இந்த நாட்டின் இளைஞர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்தோடு இளைஞர் கொள்கை உருவாக்குகின்ற போது நிச்சயமாக தொழிநுட்ப அறிவு கொண்ட கல்விமுறை மாற்றப்பட வேண்டும்.
இளைஞர்களின் திறன் அபிவிருத்திக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அத்தோடு முயற்சியாண்மைக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதால் நிலைபேறான அபிவிருத்தி அடைந்த நாடாக எமது நாட்டை மாற்ற முடியும். மட்டக்களப்பு மாவட்டத்திலே ட்ரீம் இஸ்பேஸ் அகடமி ஆரம்பிக்கப்பட்டு இன்று பலசாதனையாளர்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது.
காத்தான் குடியைச் சேர்ந்த சம்ரத்என்ற சகோதரியின் செயற்திட்டம் இன்று ட்ரீம் இஸ்பேஸ் அகடமி மூலமாக நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த சஞ்சீவன் அமலநாதன் அவர்கள் தண்ணீருக்குள் பயணிக்கும் தன்னியக்கஇயந்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.
இது வெற்றியடையும் நேரத்தில் நிச்சயமாக சுற்றுலாத்துறையில் பாரிய புரட்சியை உருவாக்க முடியும். இவ்வாறு இளம் சமூகம் புது யுகம் படைக்கப் புறப்பட்டு விட்டார்கள். ஆகவே சிறந்த வழிகாட்டல்கள் மற்றும் ஊக்குவிப்புக்கள் தேவைப்படுகின்றன. இவற்றை நிறைவுசெய்யும் கொள்கைகள் உருவாக்கப்படுவதே காலத்தின் தேவையாகும். விளையாட்டுப் பாடசாலைகள் திட்டம் நாடாளாவிய ரீதியிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
இது நிச்சயமாக பத்து அல்லது பதினைந்து வருடங்களில் சர்வதேச மட்டத்தில் இலங்கை நாட்டிற்குச் சிறந்த வெளியீடுகளைத் தருவதற்காகக் காத்திருக்கின்றது. இவ்வாறு சிறந்த செயற்திட்டங்கள் உள்ளடக்கிய கொள்கைகள் வரையப்பட வேண்டும் என்பதே இந்த நாட்டின் இளைஞர்களின் விருப்பமாகும்.
தொழில் முறைக் கல்வி சம்மந்தமாக இங்கே அதிகமான கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியிருந்தார்கள்.
அதற்கு சிறந்த கொள்கைகளும் சிறந்த வேலைத்திட்டங்களும் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவைகளை நடைமுறைப்படுத்துவதிலே குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக அவைகள் இன்னும் பிரதேச மட்டத்திற்கு முறையாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை. ஓட்டமாவடியில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த தொழில் கல்வி நிறுவனம் இன்று மூடப்பட்டுள்ளது.
ஒரு இளைஞர் சமூகம் கவலையில் இருக்கிறார்கள். 800 க்கு மேற்பட்ட இளைஞர்கள் கல்வி போன்ற இந்த நிறுவனத்தை மீண்டும் பெறுவதற்காக சமூக அமைப்புக்கள் போராடியும் அதிகாரிகளின் கவனயீனங்களும், நொண்டி சாட்டுக்களாலும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. இவ்வாறு பல இடங்களில் கொள்கைகள் நடைமுறைப்படுத்துவதில் பலவீனங்கள் காட்டப்படுகின்றன.
இவ்வாறான பலவீனமான செயற்பாடுகளைத் தவிர்த்து பலமான வேலைத்திட்டங்களை உருவாக்குவோம் எமது நாட்டை கட்டியெழுப்புவோம்.உயரிய சபையில் உரையாற்றுவதற்கு வாய்ப்பளித்த ஆளுங்கட்சி அமைப்பாளர்க்கும், சபாநாயகருக்கு எனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.