தடுப்பூசி தொடர்பான போலியான தகவல்களை நம்ப வேண்டாம் -ஏ.ஆர்.எம்.தௌபீக்
போலியான தகவல்களை நம்பாமல் 20 வயதுக்கு மேற்பட்ட சகலரும் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி தொடர்பாகத் தவறான அபிப்பிராயங்களோடு சிலர் இன்னும் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாமல் இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்துக்கென வழங்கப்பட்ட தடுப்பூசிகள் கனிசமான அளவு கிடைக்கப்பெற்று ஒவ்வொரு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
30 தொடக்கம் 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும் முதலாவது தடுப்பூசி 100 சதவீதமும், இரண்டாவது தடுப்பூசி 90 சதவீதமும் ஏற்றப்பட்டுள்ளது.
தற்போது 20 வயது தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு தடுப்பூசிகள் தொடர்ந்தும் கிடைக்கப்பெற்று வருகிறது.
இதுவரை தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள தடுப்பூசி ஏற்றும் மையங்களுக்குச் சென்று தடுப்பூசியினை கட்டாயம் பெற்றுக் கொள்ளவும்.
அண்மையில் ஏற்பட்ட மரணங்களில் 76 சதவீதமான மரணங்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களென அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.
இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் அவர்களின் பாதுகாப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் 3ஆம் மற்றும் 4ஆம் வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு டெல்டா வைரசின் பரவலும் அதன் தாக்கமும் அதிகமான நோயாளர்களும் மரணங்களையும் சம்பவித்துள்ளன.
ஆனால் இம்மாதத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.