மக்கள் குழப்பமடைய வேண்டாம்! - அமைச்சர் விடுத்துள்ள அவசர கோரிக்கை
நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஒரே விடயத்தை 108 தடவை சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று பழைய நம்பிக்கை ஒன்று உள்ளது.
அதனால் என்னவோ கடந்த 4 மாதங்களால் இடைக்கிடையில் பெற்றோலிய தொழிற்சங்கள் அதேபோல் எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களாக அவர்கள் கூறிய எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை. நான் உறுதியளித்தேன் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்னரே நான் அறிவிப்பேன் என்று.
அதன்படி, செப்டம்பர் மாதம் 29ம் திகதி நாட்டில் கச்சா எண்ணெய் பற்றாக்குறையொன்று ஏற்பட வாய்ப்புள்ளது என நான் தெரிவித்தேன். அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நான் கூறியிருந்தேன்.
மீண்டும் அதேதான் கூறுகிறேன். நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை. வீணாக குழப்பமடைய வேண்டாம்.” என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐஓசி தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 5 ரூபாவாலும், ஒடோ டீசலின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 162 ஆக இருக்கும். அதேபோல், 111 ரூபாயாக இருந்த ஒரு லீற்றர் ஒடோ டீசலின் புதிய விலை 116 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும், சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.