டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு
இலங்கையை உலுக்கிய டித்வா பேரிடரின் போது பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்கவும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
டித்வா சூறாவளியால் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் புதிய வீடுகளை கையளிக்கும் பணிகள் தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இது குறித்து அறிவித்துள்ளார்.
50 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்கத்திட்டம்
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
முழுமையாக சேதமடைந்த வீடுகளில் வசித்தவர்களுக்குப் புதிய வீடொன்றை வழங்குவது அல்லது வீடொன்றை கொள்வனவு செய்வதற்காக 50 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அந்த இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இன்னமும் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு, புதிய வீடுகள் கிடைக்கும் வரை அவர்களைத் தற்காலிக வீடுகளில் குடியமர்த்துவது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதற்கேற்ற பொருத்தமான இடங்களைக் கண்டறிந்து, அந்தப் பணிகளை மிக விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மிக ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், புதிய வீடு வாங்குவதற்கு இழப்பீடு பெறாதவர்களுக்காக வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே. ஜி. தர்மதிலக்க உட்பட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



