ஹட்டன் பகுதியில் சமையல் எரிவாயு விநியோகம்: கருப்பு சந்தை நிலவுவதாகவும் குற்றச்சாட்டு (Photos)
ஹட்டன் - நோர்வூட் பொகவந்தலாவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பலருக்கும் அதனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சமையல் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் இன்று அதிகாலை 3.00 முதல் வரிசையில் நின்றிருந்த போதிலும் குறிப்பிட்ட சிலரே சமையல் எரிவாயுவை பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை ஹட்டன் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள்களின் தட்டுப்பாடு காரணமாக அவற்றினை பதுக்கி கருப்புச்சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக விடுதி உரிமையாளர்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களையும் பல சமையல் எரிவாயு வர்த்தக நிலையங்களில் உள்ள வரிசையில் நிறுத்தி ஒரு பத்து அல்லது பதினைந்து சமையல் எரிவாயுக்களை பெற்றுக் கூடிய விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 8500 ரூபா வரை விற்பனை செய்து வருவதாகவும் இதனால் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான எரிவாயுவினை பெற்றுக்கொள்ளப் பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலரும் தெரிவிக்கின்றனர்.
எனவே, அரசாங்கம் கவனமெடுத்து ஒரு குடும்பத்திற்கு ஒரு எரிவாயு பெற்றுக்கொள்ளும் வகையில் கிராம சேவகர் ஊடாகவோ அல்லது அரச பொறிமுறைக்கு அமையவோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பொதுமக்கள் கோருகின்றனர்.
இதே போன்று பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசல் என்பனவற்றினையும் இவ்வாறு வரிசையில் நின்று வாகனங்களுக்கு நிரப்பி மீண்டும் அதனை எடுத்துச் சேகரித்துக் கூடிய விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இன்று இந்த அத்தியாவசிய எரிபொருட்களின் தட்டுப்பாடு காரணமாகவே அதனைப் பயன்படுத்தி அதிகமானவர்கள் கொள்ளை விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு குறைந்த அளவு கொடுக்கப்படுவதனால் இல்லாமல் போகலாம் என்ற அச்சத்தில் பொதுமக்களும் இரண்டு மூன்று தடவைகள் வரிசையில் நின்று அவற்றினை சேகரித்து வருகின்றன.
மேலும், கிடைத்தவர்களுக்கே திரும்பத் திரும்பக் கிடைக்கின்ற போதிலும் பல குடும்பங்கள் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட பொருட்களைப் பெற முடியாத நிலையே காணப்படுகின்றன.
இவ்வாறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தேவைக்கு அதிகமாகச் சேகரிப்பவர்களுக்கு எதிராகவும், அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேநேரம் கடந்த காலங்களில் ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகவும் விலையுயர்வு காரணமாகவும் அதிகமான குடும்பங்கள் மண்ணெண்ணெய் அடுப்புக்கு மாற்றம் பெற்றனர்'' இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மலையகத்தில் உள்ள எண்ணை நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் இடம் பெறாததனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை லிட்ரோ நிறுவனம் எவரும் வரிசையில் நிற்க வேண்டாம் இன்று
விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவித்திருந்த நிலையில் எரிவாயு விநியோகம்
இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.