5 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான டீசலுடன் வர்த்தகர் கைது
ஹோமாகமை மாக்கும்புர பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான டீசல் ஆயிரத்து 400 லீட்டர் டீசலுடன் வர்த்தகரை கைது செய்துள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
500 லீட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தண்ணீர் தாங்கிகளில் ஆயிரம் லீட்டர் டீசலும் 200 லீட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பீப்பாய்களில் 400 லீட்டர் டீசலும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
500 லீட்டர் டீசல் வீட்டின் மேல் மாடியில் உள்ள பிளாஷ்டிக் தண்ணீர் தாங்கியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த வர்த்தகர் அதிக விலைக்கு வீட்டில் எரிபொருளை விற்பனை செய்வதாக பொலிஸ் பரிசோதகர் சுமித் ஜயசிங்கவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கறுப்புச் சந்தையில் விற்பனை
இலங்கையில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், சிலர் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை கொள்வனவு செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அத்துடன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் உள்ள சிலர் மோசடியாளர்களின் உதவியுடன் எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டு இவ்வாறு கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.