நோட்டன் தியகல வீதியின் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு (Photos)
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் தியகல பிரதான வீதியில் பாரிய கல்லொன்று சரிந்து விழுந்ததில் அந்த வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 2 மணியளவில் 5ம் கட்டைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இரண்டு பக்கங்களிலும் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளமையால் இவ்வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக மத்திய மலைநாட்டில் பலத்த மழை பெய்தமையால் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் பிரள்வு என்பன ஏற்பட்டு வருகின்றன.
காசல்ரி, மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களிலும்
நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான மின்சார
சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கங்களின் நீர் உயர்ந்துள்ளதன் காரணமாக நீர் மின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்குத் தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவி வருவதனால் ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்திட்டு சரிந்து விழுந்துள்ளது.
இந்த மழையுடன் பனிமூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன
சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்து
பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.