“வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” - தி.சரவணபவன்
மாநகரசபையின் செயற்பாடு அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதன் காரணமாக எவரும் வேலை நிறுத்தம் செய்யமுடியாது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் மாநகரசபையின் செயற்பாடுகளைச் சுமுகமான நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர் ஒருவர் மாநகர முதல்வரினால் பணி நீக்கம் செய்யப்பட்டதாகக் கோரி இன்று காலை முதல் மட்டக்களப்பு மாநகரசபையின் வாயில் கதவினை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் முற்றாகத் தடைப்பட்டதுடன் மாநகரசபையின் உத்தியோகத்தர்களும் உட்செல்ல அனுமதிக்கப்படாத காரணத்தினால் மாநகரசபை முற்றாகச் செயலிழந்தது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனிடம் கேட்டபோது,
ஏற்கனவே மாநகரசபையின் ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிழையான முறையில் வழங்கப்பட்ட நியமன கடிதத்தினை திரும்பப் பெற்றுக்கொண்டு, ஊழியர்கள் அனைவரையும் கடமைக்கு அழைக்குமாறு மாநகரசபை ஆணையாளருக்கு உள்ளுராட்சி ஆணையாளரால் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாநகரசபை ஆணையாளரும் வேலை நிறுத்ததில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.
எழுத்து மூலமாக அறிவித்துவிட்டு இன்று கதவு அடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதி ஆணையாளரை உடனடியாக கதவினை திறந்து அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், பகிஸ்கரிப்பில் உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மாநகரசபையில் இயல்பு நிலையினை ஏற்படுத்தவேண்டிய தேவையுள்ளது. உள்ளுராட்சி அதிகார சபைகளின் செயற்பாடுகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒருவரும் வேலை நிறுத்தம் செய்யமுடியாது.
வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சுமுகமான நிலையினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்..