அருள்குமரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! மாவை சேனாதிராஜா தெரிவிப்பு
யாழ். மாநகரசபையின் புதிய மேயர் தெரிவில் தமது கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன், கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக செயற்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இது மாபெரும் தவறு, இவருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில் 15 பேர், எமது கட்சியின் மேயர் வேட்பாளர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டுக்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தனர்.
மகாலிங்கம் அருள்குமரன் என்ற உறுப்பினர் மட்டும் ஆர்னோல்ட்டுக்கு ஆதரவு வழங்காமல் நடுநிலை வகித்திருந்தார்.
ஆனோல்ட் தோற்றமைக்கு இவரும் ஒரு காரணமாவார். எனவே, இவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே, அருள்குமரனுக்கு எதிரான நடவடிக்கையை நாம் விரைவில் எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.