பிரதேச மட்டத்தில் முடக்குவதன் மூலம் எவரையும் காப்பற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது - சமந்திகா விஜேசுந்தர
ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை கவனத்தில் கொண்டு பிரதேச மட்டத்தில் முடக்குவதன் மூலம் எவரையும் காப்பாற்ற முடியாத அளவுக்கு கோவிட் வைரஸ் பரவல் மோசமடைந்துள்ளதாக கெஸ்பேவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் சமந்திகா விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
குறிப்பாகக் கொழும்பு உட்பட சில மாவட்டங்களில் மிக மோசமாக வைரஸ் பரவியுள்ளது என்பதால், அப்படியான மாவட்டங்களை முழுமையான முடக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் வைரஸ் இலங்கைக்குப் பரவ ஆரம்பித்த சந்தர்ப்பத்திலிருந்து கடந்த சித்திரை புத்தாண்டு வரை கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 கோவிட் மரணங்களே ஏற்பட்டிருந்தன.
எனினும் தற்போது தினமும் இரண்டு பேருக்கு மேற்பட்டோர் கோவிட்டினால் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலைமையானது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம்.
அரசாங்கம் வரையறைகளை விதிக்கும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் மக்கள் சுய ஒழுக்கத்தைப் பேணி முடிந்தவரைப் பயணங்களைக் குறைத்துக்கொண்டு சுகாதார பாதுகாப்பைக் கையாள்வது முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது கெஸ்பேவ பிரதேசத்தில் நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.