அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - ஜனாதிபதியின் முன்மொழிவிற்கு அனுமதி
அரச நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றத்தை ஒருங்கிணைத்து நிர்வகிக்க தனித்தனியான டிஜிட்டல் மாற்று அலகுகளை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது.
2025 அக்டோபர் 21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் 2025 - 2030, அரச நிறுவனங்களுக்குள் துறைசார் டிஜிட்டல் மாற்றத்தை மேற்பார்வையிடுவதற்கும், தேசிய டிஜிட்டல் பொதுமுறை முயற்சிக்கு இணங்குவதற்கும் வலுவான மற்றும் தரப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பு தேவை என்பதை அடையாளம் கண்டுள்ளது.
டிஜிட்டல் மாற்று நடவடிக்கை
அதற்கேற்ப, டிஜிட்டல் மாற்று நடவடிக்கைகளை திறம்பட நிர்வகித்து ஒருங்கிணைப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் டிஜிட்டல் மாற்று அலகு ஒன்றை நிறுவ முன்மொழியப்பட்டது.
கவ்டெக் இலங்கை (தனியார்) நிறுவனம் இந்த அலகுகளை நிறுவி செயல்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் ஏற்பாடுகளை விவரிக்கும் டிஜிட்டல் மாற்று அலகு குறிப்புச் சட்டகத்தை தயாரித்துள்ளது. இந்த சட்டகத்தின் கீழ், ஒவ்வொரு டிஜிட்டல் மாற்று அலகின் தலைவராக ஒரு முதன்மை டிஜிட்டல் அதிகாரி நியமிக்கப்படுவார்.

அமைச்சரவை அனுமதி
அவர் அந்தந்த நிறுவனத்தின் தலைவருக்கு நேரடியாக அறிக்கை செய்வார். இந்த அலகுகள், நிறுவன கட்டமைப்பு , தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு , இணையப் பாதுகாப்பு, இடைச்செயல்பாடு மற்றும் பிற டிஜிட்டல் மாற்று தொடர்பான விடயங்களில் கவ்டெக் இலங்கையிடமிருந்து சிறப்பு நிபுணத்துவத்தையும் ஆலோசனை ஆதரவையும் பெற அரச நிறுவனங்களுக்கு வழிவகுக்கும்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவை அமைச்சரவை அனுமதித்துள்ளது.