டிஜிட்டல் அடையாள அட்டை: தனியுரிமை பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்துள்ள அரசாங்கம்
இந்தியா நிதியளிக்கும் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தில் தனிப்பட்ட தரவுகள் தொடர்பில் மீறல் எதுவும் ஏற்படாது என்று இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இலங்கை குடிமக்களின் தரவு தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக இந்த திட்டம் நீண்ட தாமதத்தை எதிர்கொண்டது.
எனினும் தற்போது குறித்த திட்டம் விரைவுப்படுத்தப்படுகின்ற நிலையிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை
இந்த திட்டத்தில் எந்தவொரு தரவு மீறலுக்கும் வழி இல்லை என்றும் அதை உறுதி செய்ய முடியும் என்றும் துணை டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் நிகழ்ச்சி நிரல் காரணங்களுக்காக பல்வேறு பிரிவுகளால் பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த விடயத்தில் சுமத்தப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
முகம், கருவிழி மற்றும் கைரேகை தரவு உள்ளிட்ட தகவல்களைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துக்கு, ஏற்கனவே இந்தியா 450 மில்லியன் இந்திய ரூபாய்களை வழங்கியுள்ளது.