புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளை செய்வதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்தலாம்: யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றம்
புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்கள் மிகவும் பலமானவர்கள். தற்பொழுது அவர்களுடைய சக்தியினை நாங்கள் பயன்படுத்துகின்ற போது உண்மையில் நாட்டினுடைய பிரச்சினைக்குத் தோள் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் உபதலைவர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் இதன்போது தெரிவிக்கையில்,
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் மிகவும் பலமானவர்கள் தற்பொழுது அவர்களுடைய சக்தியினை நாங்கள் பயன்படுத்துகின்ற போது உண்மையில் நாட்டினுடைய பிரச்சினைக்குத் தோள் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
எமது பிரதேசத்தினுடைய பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பக்கூடிய ஏதுவான நிலையாக இருக்கும். அது மாத்திரமல்ல கல்விமான்கள், தொழில் துறையில் இருப்பவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் என அனைத்து பிரிவினரும் ஒன்று சேர்ந்து இந்தப் பிராந்தியத்தினுடைய அபிவிருத்தி முயற்சிக்காக தற்போதைய இக்கட்டான நிலையில் அனைத்தையும் மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றோம்.
அந்த சமூகப் பொறுப்பினை உணர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். உண்மையில் பொருளாதார பிரச்சினையில் ஏனைய மாகாணங்கள், மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம்.
யுத்த காலத்தில் எமது புலம்பெயர் மக்களின் உதவிகள் தான் எம்மை தற்பொழுது நிமிர்த்தியுள்ளது. எனவே வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் மக்களின் முதலீடுகள் தேவையானது. தற்போதைய காலம் அதற்கு ஏற்றதாக இல்லாது போனாலும் நிச்சயமாக இந்த பிரச்சினையின் பின்னால் ஒரு சிறந்த ஒரு எதிர்காலம் இலங்கைக்கு இருக்கின்றது என்று என்னால் கூற முடியும்.
கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும். எனவே இலங்கைக்கு நியாயம்
கிடைக்கப் போகின்றது. எதிர்வரும் காலத்தில்
புலம்பெயர்ந்துள்ள மக்கள் தமது முதலீடுகளை வடபகுதியில்
மேற்கொள்வதன் மூலம் வடபகுதியின் பொருளாதாரத்தை மேன்மேலும் மேம்படுத்த முடியும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.