சுரேஷ் சலேவின் கணினி கடவுச்சொல்லால் நாட்டிற்கு ஏற்படவுள்ள அச்சுறுத்தல் - பகிரங்க எச்சரிக்கை
தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவின் கணினிக்கான கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறை (CID) பெற்றால், அது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் போர் தொடர்பான அனைத்து தகவல்களும் அந்தக் கணினியில் அடங்கியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் (14.06.2026) இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கணினிக்கான கடவுச்சொல்
அவர் மேலும் தெரிவிக்கையில், சலேயின் கணினிக்கான கடவுச்சொற்களைக் கொடுங்கள் என்கிறார்கள். அதில் கை வைப்பது என்றால் - நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - இந்த நாட்டின் யுத்தத்துடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் முழு உலகுக்கும் திறந்து விடும் செயற்பாட்டிற்கு சமம்.
அவர் உயிரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால், அவரை கைது செய்து, அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று, அவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை.

புலனாய்வுத் தகவல்
ஆனால் இப்போது என்ன சொல்லுகிறார்கள்? “சலேயின் கணினியில் இருக்கும் கடவுச்சொற்களைக் கொடுங்கள்” என்று. இப்போது இதன் அர்த்தம் என்ன? இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல் பாசாங்கு செய்து, அவர்கள் சலேவிடம், "கடவுச்சொற்களைக் கொடுங்கள், இந்தக் கணினியைத் திறக்க வேண்டும்" என்று கேட்கிறார்கள்.
அது அவருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. இந்த நாட்டின் தகவல்கள், நாட்டின் புலனாய்வுத் தகவல்கள், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தகவல்கள், எதிர்காலத்தில் நடக்கக்கூடிய பயங்கரவாதச் செயல்கள் தொடர்பாக வரலாற்றுப் பதிவு செய்யப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் அனைத்தையும் இந்த நாட்டில் திறந்து விடப் பார்க்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.