கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியின் ஊடாக பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் - வியாழேந்திரன் (Photos)
கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிதியின் ஊடாக பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S.Viyalendiran) தெரிவித்துள்ளார்.
பின்தங்கிய கிராம அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்குட்பட்ட காயங் கேணி பிரதேசத்தில் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சனசமூக நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு அன்மையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது,
2022 ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையில் கிராமிய மக்களின் அபிவிருத்திக்கு பாரியளவில் நிதியான சுமார் 85,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே ஏனைய மாகாணங்கள் போன்று கிழக்கு மாகாணத்திற்க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிதியின் ஊடாக பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்.
எதிர்வரும் ஆண்டில் கிராமிய மட்ட மக்களின் பொருளாதாரத்தை மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை பாரிய அளவில் முன்னெடுப்பதற்கு முடியும்.
எதிர்வரும் ஆண்டில் கிராம மட்டத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் போது தொழில்வாய்ப்பு பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் பாரிய அளவில் நிதியினை முதலீடு செய்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் தொழில் பேட்டைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்புக்கள் விடுத்துள்ளோம்.
எமது நாட்டில் முதலீடு செய்வதன் ஊடாக பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும்.
இதனூடாக முகம் கொடுக்கக் கூடிய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தீர்வு காணலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.