எமது சமூகத்தின் வளர்ச்சியில் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது என பிள்ளையான் தெரிவிப்பு
அபிவிருத்தி என்பது வீதி மற்றும் கட்டடங்கள் அமைப்பதன் மூலம் காணமுடியாது, எமது சமூகத்தின் வளர்ச்சியில் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது என்று மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கல்வியும் பொருளாதாரமும் வேரில்லை அந்த வகையில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் முழுமையான அபிவிருத்தியை, பிரதேசத்திற்கான அபிவிருத்தியைக் காணமுடியும்.
மாவட்டத்தின் வளர்ச்சியில் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள 12 கிராம பிரிவுகளும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்ய வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
மாவட்டத்தின் அபிவிருத்திக்குப் பிரதேசத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைப்பதன் மூலமே அபிவிருத்தியைக் காணமுடியும்.
மாவட்டத்தின் அபிவிருத்திக்காக அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் இணைந்து செயற்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
பிரதேசத்தின் அபிவிருத்தியில் அரச திணைக்களங்களுக்கு அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கக்கூடாது.
அவ்வாறான தலையீடுகளை நாங்கள் செய்யப் போவதுமில்லை. திட்டமிட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அரசாங்க அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் என்றும் துணையாக நிற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதன் போது அரசாங்கத்தின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலன் நாடும் அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இங்கு பிரதேசத்தின் சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியினால் முன்மொழியப்பட்டுள்ள பிரதேச ஒருங்கிணைப்பு துணைக்குழு ஸ்தாபித்தல், 2021 ஆம் ஆண்டில் குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்களுக்கான அனுமதி வழங்கல் தொடர்பிலும் ஆராயப்பட்டு மாகாண மத்திய அரசின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள், பொலிஸார், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.







