தமிழினவழிப்பு நினைவுத்தூபி அழிப்பு! இனவாதப்பூதத்தின் மற்றுமொரு கோரமுகம்
சிங்கள இனவாத பூதத்தின் இனவழிப்பையும், கோரமுகத்தையும் மெல்ல மெல்ல அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகவே யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி அழிக்கப்பட்ட சம்பவத்தை நோக்க முடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
நினைவுத்தூபி அழிக்கப்பட்டாலும், சிங்களத்தின் இனவழிப்பின் பெருந்துயர் தமிழர் தேசத்தின் ஆன்மாவில் ஆறா வடுவாய் காலா காலமாகத் தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளில் நிலைத்திருந்து, எழும் பெருந்தழல் சிங்கள இனவாத பூதத்தை என்றோவொரு நாள் சுட்டெரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிங்களத்தின் தமிழினவழிப்பின் அடையாளச் சின்னமாக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி, இலங்கை அரசின் உத்தரவுக்கிணங்க அழிக்கப்பட்டவையானது, உலகத்தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கோப உணர்வினையும் வலியினையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழர் தேசம் மீதான சிங்கள இனவாத பூத ஆக்கிரமிப்பின் மற்றுமொரு கோரமுகமாகத் தமிழ் மக்கள் இதனை உணர்கின்றனர்.
இலங்கை தீவில் தமிழ்மக்கள் மீதான இனவழிப்பு என்பது இலங்கை அரசின் ஓர் அரச கொள்கையாக இருந்து வருகின்றதொரு நிலையில், தமிழின அழிப்பினை நினைவுபடுத்தும் அடையாளங்கள், இரத்தம் தோய்ந்த சிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை வெளிக்காட்டுபவையாக உள்ளன.
இத்தகைய நினைவுச் சின்னங்கள் தமிழ்மக்களின் கூட்டு நினைவுகளில் சிங்கள ஆக்கிரமிப்பை என்றும் நினைவுபடுத்துபவையாகவும் உள்ளன.
தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளிலிருந்து சிங்கள இனவாத பூதத்தின் இனவழிப்பையும், கோரமுகத்தையும் மெல்ல மெல்ல அகற்றும் முயற்சியின் ஒருபகுதியாகவே யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி அழிக்கப்பட்ட சம்பவத்தை நோக்க முடியும்.
சமீபத்தில் தியாகதீபம் லெப்.தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளாகட்டும், தமிழீழத் தேசிய மாவீரர் நாளுக்கு விதிக்கப்பட்ட தடைகளாகட்டும் யாவுமே சிங்களத்தின் தமிழின அழிப்பு, தலைமுறை தலைமுறையாக தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளில் நிறைந்து தம்மைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு உண்டு என்பதனை வெளிப்படுத்தியது.
மேலும் தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி இலங்கை தீவில் இல்லை என்பதனையும் வெளிக்காட்டியிருந்தது.
இன்றைய நினைவுத்தூபி அழிப்புச் சம்பவமும் தமிழ் மக்களுக்கு தமது அரசியல் உரிமைக்காகப் போராடிய மாவீரர்களை மட்டுமல்ல, இன அழிப்புக்கு உள்ளான மக்களை நினைவேந்துவதற்கும் உரிய அரசியல் வெளி இல்லை என்பதினையே வெளிக்காட்டுகின்றது.
இதேவேளை இந்த நினைவுத்தூபி அழிப்பினை சட்டத்துக்கு உட்பட்டதொரு நடவடிக்கையாகவே இலங்கை அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் வெளிக்காட்டுகின்றன. இலங்கை அரசின் நோக்கம் என்ன என்பது பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத் தெரியாததொன்றல்ல.
தமிழ் மக்களின் உணர்வின் வடிவமாக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபியினைத் தம்மால் அழிக்க முடியாது என்பதனை வலியுறுத்தி தனது பதவியினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துறந்திருப்பாரேயானால் அவர் தமிழ் மக்களின் மனதில் உயரிய இடத்தைப் பெற்றிருப்பார்.
தமிழ் மக்களின் போராட்ட உணர்வும், உலகக் கவனத்தை ஈர்த்திருக்கும் ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கான நாள் நெருங்கி வரும் இச்சூழலில் தொடர்ந்து நிலைமாற்றுக்கால நீதியை (transitional justice) பற்றிப் பேசுவது வெறும் காலத்தை வீணடிக்கும் வேலையாகவே இருக்கும் என்பதோடு நீதியைப் புறந்தள்ளிய வகையில் கட்டுமானமயப்படுத்தப்பட்ட (structural genocide) இனவழிப்பு தொடர்ந்தும் இடம்பெற வழி சமைக்கும் என்றே நாம் கருதுகின்றோம்.
இனவழிப்பு புரியும் இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது அதற்குச் சமனான சர்வதேச நீதிப்பொறிமுறையிலோ நிறுத்துவது தான் தமிழர்களுக்கான ஈடுசெய் நீதியினை (Remedial Justice) பெற்றுத் தரும்.
யாழ். பல்கலைக்கழகத்தின் அமையப் பெற்றிருந்த தமிழினவழிப்பு நினைவுத்தூபி அழிக்கப்பட்டாலும், சிங்களத்தின் இனவழிப்பின் பெருந்துயர் தமிழர் தேசத்தின் ஆன்மாவில் ஆறா வடுவாய் காலா காலமாகத் தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளில் நிலைத்திருக்கும்.
இந்நினைவுகளிலிருந்து எழும் பெருந்தழல் சிங்கள இனவாத பூதத்தை என்றோவொரு நாள் சுட்டெரிக்கும் என நாடுகடத்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.