கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் தடை செய்யப்படும் : கடற்தொழில் அமைச்சு
கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகளுக்கும் அதே போல கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டு வைக்கும் சகல செயற்பாடுகளையும் தடை செய்வதற்கு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் முடிவெடுத்திருப்பதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நேற்று(24.02.2026) பிற்பகல் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் அழகாபுரி நன்னீர் கடற்றொழிலாளர் சங்க கட்டடத்தினை திறந்து வைத்த பின்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமான அனைத்து தொழில்களும்
தொடர்ந்து தெரிவிக்கையில் இழுவை மடி படகுகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் உள்ளனர். அதேபோன்று சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுபவர்களும் உள்ளனர்.

நாங்கள் அரசாங்கம் என்ற வகையிலே ஆட்சி பீடத்துக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளது.
இதன் போது நாங்கள் தீர்மானித்திருப்பது சட்டவிரோதமான அனைத்து தொழில்களையும் தடுப்பது என்பதாகும்.
இவ்வாறான சட்டவிரோத தொழில்கள் இயற்கைக்கு ஆபத்தானது கடலுக்கும் ஆபத்தானது. அத்துடன் சிறுகடற் தொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அரசாங்கம் விசேட கவனம் எடுத்திருக்கின்றது.
கடலை பாதுகாக்க வேண்டிய தேவை
றோலர்களை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்களை இன்னும் இரண்டு வாரத்துக்குள் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.
அவர்கள் பக்கத்தில் நியாயமான யோசனைகள் இருக்குமாக இருந்தால் அது பற்றிய யோசனைகள் முன்வைக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

இந்திய இழுவை படகுகளாலும் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றது. இந்த கடல் எங்களுக்கு சொந்தமானதல்ல. எங்கள் எதிர்கால சந்ததிக்கு சொந்தமானது. ஆகவே இந்த கடலை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
கடல் வளங்களை அழிக்கும் அல்லது அழித்து கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு வேட்டு வைக்கும் சகல செயற்பாடுகளையும் தடை செய்வதற்கு நாங்கள் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் முடிவெடுத்து இருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


