நிதிச்சரிவுக்கு மத்தியிலும் வீதிகள் அமைப்புக்கு அதிக பணம் செலவு!
நிதியமைச்சின் புதிய ஆண்டறிக்கை ஊடாக கடந்த ஆண்டு ஏற்பட்ட நிதிச்சரிவுக்கு மத்தியிலும் வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சில துறைகளுக்கு அரசாங்கம்,அதிக அளவில் செலவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கடந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கும் டிசம்பர் 31க்கு இடையில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டு நிதி வழங்கல்களில் 33.5 வீதம் கொடுப்பனவுகளுக்கு செலவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து வீதிகள் மற்றும் பாலங்களுக்க 16.8 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் சமூக நலன்களுக்கு வெறும் 9.9 சதவீதமே செலவிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தின் அறிக்கை
நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை பொருளாதாரத்தின் மோசமான வீழ்ச்சியை விரிவாக குறிப்பிட்டுள்ளது.
பலவீனமான வருவாய் சேகரிப்பு, அதிக கடன் மற்றும் நிலையான நடப்புக் கணக்கு பற்றாக்குறை கோவிட் மற்றும் ரஷ்ய-உக்ரைன் மோதல் ஆகியவை இந்த பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும் கடந்த ஆண்டின் 12 மாதங்களில், மொத்தம் 2.41 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நிதி வழங்கல்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளன.
இதில், 2.39 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகவும் 17.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாகவும் கிடைத்துள்ளன.
இந்த கடன்களில் 33.5 சதவீதமானவை சீனாவுடன் கையெழுத்திட்ட உடன்படிக்கைகள் ஊடாக பெறப்பட்டவையாகும்.
இதனையடுத்து 25.5 சதவீத நிதிகள் ஆசிய அபிவிருத்தி வங்கிடம் இருந்தும், 18 வீதம் உலக வங்கியிடம் இருந்தும் கிடைத்துள்ளன.
சீன மேம்பாட்டு வங்கி
சீன மேம்பாட்டு வங்கியிலிருந்து மாத்திரம் 809.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டுள்ளன.
வீழ்ச்சியடைந்த நிதிகளுக்கு மத்தியில் அரசாங்கம் 2021ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதி மேம்பாட்டு மற்றும் விரைவுப் பாதை வலையமைப்பை ஆரம்பித்தது.
எனினும் அதில் சுமார் 41 கிலோமீற்றர் விரைவு பாதைகளையே நிறைவு செய்துள்ளதாக
நிதியமைச்சின் அறிக்கை கூறுகிறது.