தகுதியற்ற ஒரு நபர் தேசபந்து : முன்வைக்கப்படும் கடும் விமர்சனங்கள்
தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நியமனத்திற்கு எதிர்ப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்பதை அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட போதே நாம் தெரிவித்திருந்தோம்.
அரசியலமைப்பு பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் இந்த நியமனத்துக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
எனினும் ஆளுந்தரப்பு அதனை கவனத்தில் கொள்ளாததால் நீதிமன்றத்தின் ஊடாக தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக பணியாற்றுவதற்கான தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டோம்.
அது மாத்திரமின்றி அண்மையில் நீதிமன்றத்தால் கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சட்டத்தை அவமதிக்கும் வகையில் தலைமறைவாகியிருந்தார்.
எனவே அவர் பதவி நிலையிலிருந்து தரமிறக்கப்பட வேண்டும் என்பதற்கான கோரிக்கையையும் நாம் நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கின்றோம்.
இந்நிலையில், அவரை பதவி நீக்குவதற்கான யோசனையை ஆளுந்தரப்பு எம்.பி.க்கள் நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது.
எமது நாட்டு சட்டத்துக்கமைய பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் உள்ளிட்டவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது.
இதனை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கி, அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதன் பின்னர் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்படும்.
அந்த குழு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும். நாடாளுமன்றத்தில் ஆகக் குறைந்தது 113 வாக்குகளுடன் இந்த யோசனையை நிறைவேற்ற முடியும். ஐக்கிய மக்கள் சக்தி என்ற ரீதியில் நாம் இதற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
