தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பிரதி அமைச்சர் பிரதீப் சந்திப்பு
இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சென்னையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது பேரிடர் காலத்தில் இலங்கைக்குத் துரிதமாக உதவிய இந்திய அரசுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த தமிழக அரசுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பில் பிரதி அமைச்சர் பிரதீப் தனது நன்றியை தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துக் கொண்டார்.
மலையக மாணவர்களுக்கான தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகள் தொடர்பில் பிரதானமாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சபரிமலை ஐயப்ப யாத்திரையைப் புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இலங்கை அரசுக்குப் பாராட்டுகளை தெரிவித்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு உதவிகளை வழங்கவும் கலை, கலாசார கல்வி அபிவிருத்திக்குத் தொடர்ந்து தமிழக அரசு உதவி மற்றும் ஒத்துழைப்புகளை நல்குவதாகவும் இதன்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
டிட்வா புயலின் தாக்கம்
இந்தச் சந்தர்ப்பத்தில் சென்னையில் உள்ள இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் கலாநிதி கணேசன் கேதீஸ்வரனும் கலந்துகொண்டார். இலங்கையில் கடந்த 27ஆம் திகதி முதல் இரு நாட்கள் வீசிய டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மலையகம் உட்பட 17 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் வாழும் பகுதிகளில் பாரிய அளவில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டன.

"பேரிடரில் இருந்து இலங்கையை மீட்க இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் எமக்கு உதவிக்கரம் நீட்டின. காலம் உணர்ந்து செயற்பட்ட இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும், மலையக மக்களுக்கு இலங்கை அரசு முன்னெடுத்துள்ள அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் சம்பந்தமான விளக்கத்தை வழங்கவும், பேரிடர் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களின் அடுத்த கட்ட நகர்வுக்காக இலங்கை அரசு முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்தவும், அதேநேரம் தமிழக அரசின் குறுகிய கால நீண்ட கால ஒத்துழைப்பு சம்பந்தமாக கலந்துரையாடவும், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று சென்னையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்." - என்று பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீண்ட நேர கலந்துரையாடலின் போது இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் மலையக மக்களின் வாழ்வு, அவர்களின் எதிர்காலம், அதற்காக இலங்கை அரசு எடுக்கும் திட்டங்கள், இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசுகளால் செயற்படுத்தக்கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன என்றும் பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
தனது சொந்த ஊரில் புதிய வீடு கட்டியுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர் விபுணன்.. இதோ போட்டோஸ் Cineulagam