பல வழக்குகளுடன் தொடர்புடைய குழு அநுராதபுரத்தில்! ஒன்றுகூடியவர்களின் பின்னணி தொடர்பில் பிரதி அமைச்சர் கூறும் விடயம்
அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றுகூடியவர்களின் பின்னணி என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய குழுவினரை அங்கு காண முடிந்தது என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் மூதூர் தொகுதிக்கான இளைஞர் மாநாடு நேற்று (13.09.2026) மாலை மூதூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மக்களுக்கான ஆட்சி
மேலும் தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஊழல்வாதிகளிடமிருந்து பொறுப்பேற்ற நாட்டை, எதிர்கால இளைஞர்களுக்கு செழிப்பான நாடாக கையளிக்க வேண்டும். இந்த நாட்டில் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இனிமேல் இடமளிக்க முடியாது. எங்களுக்கு வாக்களித்த மக்களின் அரசியல் மாற்றத்தை நாம் செய்தே தீருவோம். இது மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி; மக்களுக்கான ஆட்சி. பரம்பரை குடும்ப அரசியலை தோற்கடித்தே தீருவோம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் பிழையான அரசியல் கலாசாரத்துக்கும் இனவாதத்துக்கும் இனிமேல் இந்த நாட்டில் இடமளிக்கக்கூடாது. இதற்காகவே தூய்மையான மக்கள் நலன் கொண்ட இளைஞர் படையணியை உருவாக்கி வருகின்றோம். அவர்களின் கைகளில் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.
இந்த நாட்டில் பல்வேறு சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்த நிலையில், அரசியல் நோக்கங்களுக்காக மக்களிடையே இனவாதத்தையும் மதவாதத்தையும் உருவாக்கி, இன ஒற்றுமையையும் தேசிய ஐக்கியத்தையும் சீர்குலைத்தனர். எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இனவாத மற்றும் மதவாத அரசியலை மக்கள் தோற்கடித்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை நிறுவினர்.
ஊழல் குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்க காலத்திலும் அரசியல்வாதிகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவில்லை. அந்த அரசியல் கலாசாரத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். இனிமேல் அரச சொத்துக்களை களவாடுபவர்களுக்கும் சூறையாடுபவர்களுக்கும் நிச்சயமாக சட்டத்தின் முன் தண்டனை கிடைக்கும்.

அவ்வாறான புதிய அரசியல் கலாசாரத்தை நாம் நாட்டில் உருவாக்கி வருகின்றோம். விசாரணைகளை துரிதப்படுத்தி, நீதித்துறையை வலுப்படுத்தி, சுயாதீனமான நீதித்துறையை பாதுகாத்து கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. உறுதியான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, நாளைய இளைஞர்களிடம் வளமான நாட்டை ஒப்படைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
2025ஆம் ஆண்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டியுள்ளோம். வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மேலும் வலுவான துறையாக மாற்றியுள்ளோம். ஏற்றுமதி பொருளாதாரத்திலும் முக்கியமான முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாகவும் 2025 அமைந்துள்ளது.
அநுராதபுர கூட்டம்
வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. மத்திய கிழக்கு மோதல் எமது நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும், அதனை அரசாங்கம் சாமர்த்தியமாக கையாண்டு, அந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளது.

அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றுகூடியவர்களின் பின்னணி என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய குழுவினரை அங்கு காண முடிந்தது.
‘அடுத்த ஜனாதிபதியாக நாமலே ஆக்குவோம்’ என்ற கோஷத்துடன் அவர்கள் வந்திருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தோற்கடித்து, தங்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கமே அவர்களின் அரசியல் ஒன்றுகூடலின் பின்னணியில் காணப்படுகிறது. எத்தகைய வேடம் போட்டாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுடைய அரசாங்கம். அதனை எவராலும் தோற்கடிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
