முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அவசர அறிவுறுத்தல்
நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும் உலமாக்கள் மிகுந்த நிதானத்துடனும் நடுநிலைமையுடனும் செயற்பட வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.
இது தொடர்பாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் M.S.M. நவாஸ் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தேவையற்ற குழப்பங்கள்
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, சர்வதேச விவகாரங்களில் நடுநிலைமை கடந்த சில வாரங்களாக நாட்டின் சில பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட ஜும்ஆ பிரசங்கங்களின் போது, மத்திய கிழக்கு நிலவரம் குறித்து முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் பல்வேறு முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு என்ற ரீதியில், சர்வதேச விவகாரங்களில் நடுநிலைமையைப் பேணுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஆலோசனைகளுக்கு அமையப் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்.
மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பில் உரையாற்றும் போது, எந்தவொரு தரப்புக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலான உணர்ச்சிகரமான பேச்சுக்கள் இடம்பெறக்கூடாது. நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பது அனைவரதும் கடமையாகும்.
மதத் தலைவர்கள் முழுமையான ஒத்துழைப்பு
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இறையாண்மைக்கும் மதத் தலைவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்காகவும், அந்தப் பிரதேசங்களில் நீடித்த சமாதானம் ஏற்படவும் ஜும்ஆவின் போது விசேட பிரார்த்தனைகளை முன்னெடுக்க வேண்டும்.

உலக மக்கள் எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீளவும், சகல இன மக்களும் ஐக்கியமாக வாழ்வதற்கும் இறைவனிடம் வேண்டுதல் செய்யப்பட வேண்டும்.
அறிவு பூர்வமான செயல்பாடு இக்கட்டான இந்தச் சூழலில் உணர்ச்சிகளுக்கு இடமளிக்காது, அறிவுப்பூர்வமாகவும் நிதானமாகவும் செயற்பட்டு எமது தாய்நாட்டின் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் கதீப்மார்களைத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.