பறிபோகும் கஞ்சிகுடிச்சாறு மண் வளம் - மீட்டுத்தருமாறு மக்கள் கோரிக்கை
அம்பாறை - கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் கால்வாய் பகுதியினை தூர்வார் செய்வதாகக் கூறி கடந்த சில மாதங்களாக பாரிய மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் கனரக வாகனங்களைக் கொண்டு வெளி மாவட்டங்களுக்கு மண் ஏற்றப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மண் ஏற்றிச் செல்லும் பாரவூர்தியானது அதிக வேகத்தில் செல்வதனால் பலர் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் சிறுவர்கள் பாடசாலைக்குப் போகும் போதும் சிரமங்களுக்கு உட்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த மண் அகழ்வு தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றும் குறித்த மண் அகழ்வு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தலைமையில் இடம்பெறுவதாகவும் அறியமுடிகின்றது.
வாய்க்காலைப் பெரிதாக்க வேண்டும் என்ற போர்வையில், சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகின்ற இடத்தில் காடுகள் அழிவடைந்து வருவதால் காட்டு வெள்ளம் ஏற்படும்போது அந்த கிராமமே மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தூர்வார் எனும் பெயரில் ஒரு நாளைக்கு 500தொடக்கம் 600 க்கு மேற்பட்ட மண் குவியல்களை எடுத்து வருகின்றனர் . சுமார் 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் ரூபா அளவில் மண் வெளி மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றப்பட்டு வருவதையும் காணக்கூடியதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சட்டவிரோத மண் அகழ்வுக்கு பலதரப்பட்ட அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாகவும் உடனடியாக இந்த மண் சுரண்டலை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த மண் அகழ்வு நிறுத்தப்படாத பட்சத்தில் வீதியில் இறங்கிப் போராட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.