சஜித் அணியினரின் பதவி விலகலுக்கு தேர்தல் முறைமையே பிரதான காரணம்! மரிக்கார் எம்.பி
ஐக்கிய மக்கள் சக்தி தொகுதி அமைப்பாளர்களின் விலகலுக்கு தேர்தல் முறைமையே பிரதான காரணம் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பட்டியல் மூலம் கட்சிக்குக் கிடைக்கப் பெற்ற ஆசனங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாகவே ஒரு சில தொகுதி அமைப்பாளர்கள் பதவி விலகத் தீர்மானித்துள்ளனர்.
தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முதல் இரண்டு பேரைத் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கட்சி தொகுதி அமைப்பாளர்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தது.
தேர்தல் முறைமை
அதேபோன்று பெண்களை நியமிப்பது தொடர்பாகவும் சில அளவுகோள்களை வழங்கி இருந்தது. அதன் பிரகாரம் அதிகமான இடங்களில் கட்சி அவ்வாறு செயற்பட்டிருந்தது.
ஜனநாயகம் என்பது மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றவர்களைத் தெரிவு செய்வதாகும். என்றாலும் இந்தத் தேர்தல் முறைமையை 100 வீதம் பின்பற்றும்போது தொதி அமைப்பாளர்கள் பல்வேறு நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தொகுதி அமைப்பாளர் என்ற வகையில் அந்தப் பிரச்சினையை நானும் எதிர்கொள்கின்றேன். இந்தத் தேர்தல் முறைமையால் எனக்கு விருப்பமான, வினைத்திறன் மிக்க பலரைத் தெரிவு செய்துகொள்ள முடியாமல் போயிருக்கின்றது.
பதவி விலகல்
தேர்தல் ஒன்று முடிவடைந்த பின்னர் தேசியப்பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும்போது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமானதாகும்.
அதனால் பதவி விலகத் தீர்மானித்திருக்கும் தொகுதி அமைப்பாளர்கள் இந்த நேரத்தில் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. அவர்கள் இந்தக் கட்சிக்காக ஆரம்ப காலத்தில் இருந்து பாடுபட்டவர்கள்.
தேர்தல் சட்டத்தில் இருக்கும் பிழையான நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். அதனால் இது கட்சியின் தவறு அல்ல. தொகுதி அமைப்பாளர்களின் மன ஆதங்கமும் நியாயமானதாகும்.
எனவே, தொகுதி அமைப்பாளர்களின் பதவி விலகல், அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கோபத்தில் எடுத்த தீர்மானமாகும். அது ஒருசில நாட்களில் சரியாகும். அதனால் அது தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
