டெங்கு மரண எண்ணிக்கை 69ஆக உயர்வு
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தகவல்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 92,854 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சி
சமீபத்திய புள்ளிவிவரங்கள் டெங்கு இறப்பு விகிதத்தை 0.07வீதமாகக் காட்டுகின்றன என்றும், இது நுளம்புகளால் பரவும் இந்த நோயால் ஏற்படும் தொடர்ச்சியான சுகாதாரச் சுமையை எடுத்துக்காட்டுகிறது என்றும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டில் டெங்கு பாதிப்புகள் கணிசமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் 29,964 பாதிப்புகளும், அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 21,533 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 7,516 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 19,778 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த பாதிப்புகளில் 21.30வீதம் ஆகும்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நாடு முழுவதும் அதிக அபாயம் உள்ள 96 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.