ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கனடாவிலும் ஆர்ப்பாட்டம்
ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலுக்கு நீதி கோரி, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தொடர்ந்தும் ஏற்பாடு செய்து வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத் தொடரின் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் கடந்த 23 ஆம் திகதி கனடாவில் நடைபெற்றுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலுக்கான நீதியை நிறைவேற்றுவதற்கான கனேடிய ஒத்துழைப்பு அமைப்பினர் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம், Markham & Ellesmere Intersection இல் நடைபெற்றது.
இன, மத, கட்சி பேதமின்றி அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதுடன் ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளியிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் நடைபெற்று 30 மாதங்கள் கடந்துள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை இன்னும் சட்டத்திற்கு முன் கொண்டுவர முடியவில்லை.
இதன் காரணமாக இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட உண்மையான சூத்திரதாரிகளை வெளிகொண்டு வருமாறு வலியுறுத்தியும், சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட கோரியும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டால், அடுத்த வாரங்களில் உலகம் முழுவதும் உள்ள பிரதான நகரங்களில் இப்படியான ஆர்ப்பாட்டங்களை நடத்த வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.





