புதுக்குடியிருப்பு கள்ளவெட்டு வயல் நிலங்களை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்(Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் அமைந்துள்ள கள்ளவெட்டு வயல் நில பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமையினையும் கண்டித்து விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தினால் விடுவிக்கப்படாத நிலையில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்து இன்று ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை சென்றடைந்துள்ளது.
உதவி பிரதேச செயலாளரிடம் போராட்டக்காரர்கள் தங்கள் மனுவினை கையளித்துள்ளார்கள். கள்ளவெட்டு வயல் நிலம் 1972 ஆம் ஆண்டு தொடக்கம் விவசாயம் செய்து வந்த நிலையில், காணி ஆவணங்கள் என்பன மக்களிடம் உள்ள நிலையில் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலையில் 2012 ஆம் ஆண்டு மக்கள் மீள் குடியேறியபோது குறித்த பகுதி வனவளத்திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு மக்களை விவசாயம் செய்யவிடாது நிறுத்திக்கொண்டுள்ளார்கள்.
இது தொடர்பில் பல அபிவிருத்திக்குக் கூட்டத்தில் எடுத்துரைத்தும் இன்றுவரை விவசாயிகளுக்கான நிலம் வழங்கப்படவில்லை. இன்னிலையில் குறித்த பகுதியில் திட்டமிட்டு மணற்கொள்ளை இடம்பெற்று வருகின்றது.
வயல் நிலங்கள் அனைத்தும்
தோண்டப்பட்டு மண்கள் அகற்றப்படுகின்றன இவ்வாறு இயற்கை வளம்
அழிக்கப்படுகின்றது.
இதற்கான தீர்வினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டுப்
பெற்றுத்தரவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.