கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி(Photos)
கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த பேரணியானது இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தியில் நிறைவடைந்தது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த போராட்டம் ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கொட்டும் மழையின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நனைந்தவாறு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. டிப்போ சந்தியில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயலகத்திற்கான மகஜரை வேலன் சுவாமிகளிடம் கையளித்தார்.
போராட்டத்தின்போது ஊடகங்களிற்குக் கருத்து தெரிவித்த வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்க செயலாளர் லீலாதேவி தெரிவிக்கையில்,
இன்றைய போராட்டம் நிறைவடைந்தது. இந்த போராட்டத்திற்காக பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் குறித்த அழைப்பினை ஏற்றுப் பலர் இங்கு வருகை தந்திருந்தனர். ஆனால் இன்றைய போராட்டத்தில் பொதுமக்கள் ஆதரவு தந்திருக்கவில்லை. ஒரு சில அரசியல்வாதிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில் பொதுமக்களிற்கு ஒரு செய்தியை நாங்கள் தருகின்றோம். இந்த போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு கடந்த காலங்கள் போன்று இல்லை. உங்கள் வீட்டிலும் இதுபோன்று சம்பவங்களும், காணாமல் ஆக்கப்படுதலும் இல்லாதிருக்கவும், பேரப்பிள்ளைகள், அடுத்த சந்ததிக்கு இவ்வாறு நடந்தேறக்கூடாது என்பதற்காகவுமே போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
உங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள வேப்பம் மரம் அழிக்கப்பட்டு அரச மரம் முளைக்கும்போதுதான் அதனை நீங்கள் உணர்வீர்கள். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பும் எமக்கு போதாது. உண்மையில் இந்த போராட்டத்தை அவர்கள் முன்னின்று நடாத்தியிருக்க வேண்டும். அவர்கள் தமது ஆதரவாளர்களை அழைத்து வந்து இந்த போராட்டத்தை வலுப்பெற வைத்திருக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட வவுனியா மாவட்ட சங்க தலைவி குறிப்பிடுகையில், எமது உறவுகள் இறந்துவிட்டனர் என்பதாக அரசாங்கம் கூறுகின்றது. யுத்தத்தில் இறந்தவர்களை நாங்கள் கேட்கவில்லை. சரணடைந்த, கையளிக்கப்பட்ட எமது உறவுகளையே நாங்கள் கேட்கின்றோம். அவர்களிற்கு என்ன நடந்தது என்பதை எமக்கு வெளிப்படுத்த வேண்டும். அதற்காகவே நாங்கள் சர்வதேசத்தை நாடி நிற்கின்றோம்'' என கூறியுள்ளார்.
இந்த நாட்டில் தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் பாரபட்சம் காணப்படுகிறது. தமிழ் மக்களின் மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம் கேள்வியாக்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக எமது மத அடையாளாங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் உருவாகின்றன. எமது பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதற்காகவே புது சட்டங்கள், திட்டங்கள் அமுலுக்கு வருகின்றன.
மக்களுக்கு அனுபவங்கள் மூலமாக ஏற்படும் உயிர்ப்பயம் இவை எவற்றையும் பொருட்படுத்தாது மௌனிக்கச் செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது மன நிலையை பாதிக்கும் வகையில் எம்மீது இலங்கை அரசின் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தொடர்கிறது. பின்தொடர்தல் , தொலைபேசி அழைப்பு, வீடியோ எடுத்தல் என்பன எமது உறவுகளை அச்சமூட்டும் வகையில் உள்ளன. போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இப் போராட்டத்தில் முன்னிலை வகிப்பவரின் குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகிறது.
எமது நீதிக்கான இந்த போராட்டத்தை தொடராமல் செய்வதற்கான குழப்பங்கள் உருவாக்கப்பட்டும் எம்மில் பலரை வயதாகிய தாய்மார், தனியாக குடும்பங்களை தலைமை ஏற்று நடத்தும் பெண்கள் என்று கூட பாராமல், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைத்து விசாரணை என்ற பெயரில் மன உழைச்சலை தருவதும் நீதிக்கான எமது பயணத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது.
தங்களின் கடந்த வருட அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு
இலங்கையின் இனவழிப்பு தொடர்பில் பாரப்படுத்துவதற்கு பரிந்துரை
செய்திருந்தீர்கள் அதை விரைவில் செய்வதற்கு ஏதுவாக உரியபடிமுறைகளையும்
தாங்களும், தாங்கள் சார்த்த ஐ.நா சபையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்றும்
கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.