களுதாவளை பிரதேசசபை முன்பாக ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று - களுதாவளை பிரதேச சபையின் முன்பாக பெரியகல்லாறு கிராமத்தை சேர்ந்த விளையாட்டுக்கழக உறுப்பினர்களால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அக்கிராமத்தைச் சேர்ந்த 8 விளையாட்டுக் கழகங்களுக்கு மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதனினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இக்கடிதம் தமது விளையாட்டு துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விளையாட்டுக் கழகங்கள் பிரதேச சபை தவிசாளரிடம் தெரிவித்ததையடுத்து, இது தொடர்பில் இன்று நேரில் பேசி கலந்துரையாட வருமாறு தவிசாளரினால் விளையாட்டுக் கழகங்களுக்குக் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
தவிசாளரின் அழைப்புக்கு இணங்க சுமார் 50 இற்கும் மேற்பட்ட விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் இன்று காலை பிரதேச சபைக்கு வருகை தந்தபோது அங்கு அழைப்பு விடுத்த தவிசாளரோ, சபைச் செயலாளரோ இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அங்கிருந்த உத்தியோகத்தர் ஒருவரிடம் தவிசாளர் வரவில்லையா என கழக உறுப்பினர்கள் வினவியபோது அவர் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த இடத்திற்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் அப்பிரதேச சபையின் உறுப்பினர் மே.வினோராஜ் ஆகியோர், விளையாட்டு கழக உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், பிரதேச சபை செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடி விட்டு இப்பிரச்சினைக்குப் பிரதேச சபை நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதனையடுத்து “தமக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும், தவிசாளர் உடன் இங்கே வரவேண்டும்” என கோரி பதாதைகளை ஏந்தியவாறு விளையாட்டு கழக உறுப்பினர்கள் பிரதேசசபை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், “கண்டா வரச் சொல்லுங்கள் தவிசாளரைக் கண்டா வரச் சொல்லுங்கள், எந்தக் காரணத்தின் அடிப்படையில் பெரிய கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து கிரிக்கட் விளையாடுவதைத் தடை செய்தீர்கள், மைதானத்தின் உண்மையான அளவினை நில அளவை செய்து உரியமுறையில் வரையறுத்து வர்த்தமானியில் பிரசுரித்து எங்களுக்குரிய மைதானத்தைப் பெற்றுத்தா, தடையை நீக்கு தடைய நீக்கு கடினப்பந்து கிரிக்கட் தடையை நீக்கு” உள்ளிட்ட கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரத்தை அவ்விடத்திலிருந்தே விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை இப்பிரச்சினைக்குத் தம்மால் தீர்வு பெற்றுத்தரப்படும் என உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
