உயிரிழந்த மீனவருக்கு நீதி கோரி மாதகலில் ஆர்ப்பாட்டம் (Video)
மாதகல் கடலில் மர்மமான முறையில் கடந்த 11.01.2022 அன்று உயிரிழந்த மீனவர் எட்வேட் மரியசீலனின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு கோரி இன்று அவரது இல்லத்திற்கு முன்பாக கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்பு இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டக்காரர்கள் "மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து, மீனவக் குடும்பங்களில் பிள்ளைகள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்து, கடலில் தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்து, உயிரிழந்த மீனவர்களுக்கு இழப்பீட்டை வழங்கு" போன்ற கோசங்கள் எழுப்பி சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சிவனேசன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் வலி தென்மேற்கு மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மீனவ அமைப்புகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.





