மட்டக்களப்பில் ஹிஷாலினி மரணத்துக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மகளிர் அணி மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஹிஷாலினியின் மரணத்துக்கு நியாயம் வேண்டி சிறுவர்களைச் சிதைக்காதீர்கள் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீதி சுற்று வட்டத்தில் இன்று(30) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பு ஹிஷாலினியின் மரணத்துக்கு நியாயம் வேண்டி மட்டக்களப்பு நகர் கல்குடா, பட்டிருப்பு ஆகிய பிரதேசங்களில் இன்று ஒரே நேரத்தில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள வீதி சுற்று வட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்படப் பலர் ஒன்றிணைந்து ஹிஷாலினிக்கு நீதிவேண்டும், சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்து, மக்கள் பிரதிநிதி சிறுமியைச் சீரழிப்பதா, சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, விசாரணையைத் துரிதப்படுத்து, வீட்டுவேலை செய்வோரைப் பதிவு செய் போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் ஒருமணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.