தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்க்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஈழத்தமிழர் சார்பாக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இன்று(11) தனது வடமராட்சி அலுவலகத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அவருடன் இணைந்து அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு, ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பாகவும் ஈழத் தமிழர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியத் திரையுலக வரலாற்றில், 1977-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்க்குப் பிறகு, ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து நேரடியாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்பது இதுவே முதன்முறையாகும்.
அன்று எம்.ஜி.ஆர் 30.4% வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்த நிலையில், தற்போது விஜய் 38% வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருப்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஈழத் தமிழர் விவகாரம்
ஈழத் தமிழர் விவகாரத்தில் எதிர்பார்ப்பு கடந்த 2013-ம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகச் சட்டமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்காக ஒரு முக்கியத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என்றும், இதற்குச் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
அதே போன்று, தற்போது பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் , ஈழத் தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கான அழுத்தங்களை இந்திய மத்திய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்றும் ஈழத் தமிழர்கள் சார்பாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழக மற்றும் இலங்கை கடற்றொழிலார்களுக்கிடையேயான சிக்கல்கள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடற்றொழிலார்களுக்கிடையிலான பிரச்சனை
இது குறித்து செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வாழ்வாதாரப் பாதுகாப்பு: இரு நாட்டு கடற்றொழிலார்களுக்கிடையிலான பிரச்சனைகளால் ஈழத்து கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் வள அழிப்பு: தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றன.
சொத்து சேதம்: தொடர்ச்சியான மோதல்களால் கடற்றொழிலாளர்களின் படகுகள் மற்றும் உபகரணங்கள் சேதமடைகின்றன.
எத்தனை ஆட்சியாளர்கள் மாறினாலும் தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்சனைக்கு, புதிய முதலமைச்சர் அவர்கள் ஒரு நிரந்தரமான மற்றும் சுமூகமான தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சி மீனவ அமைப்புகள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.