வளமான ஈழத்தை அமைக்க விஜய் ஒத்துழைக்க வேண்டும்: சுரேஸ் பிரேமசந்திரன்
வளம் மிக்க தமிழகம் மாத்திரமல்லாமல் வளமான ஈழத்தை அமைப்பதற்கும் விஜய் ஒத்துழைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சருக்கு ஈழத்தமிழ் மக்கள் சார்பாக முழுமையான வாழ்த்துக்களை கூறுகின்றோம். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு அவர் கடினமாக உழைப்பார் என்று நம்புகின்றோம்.அவர் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த ஒருவர்.
ஈழத் தமிழர்களின் பிரச்சினை
இந்தியாவில் தமிழகம் பல விடயங்களில் வளர்ச்சியடைந்த ஒரு மாநிலமாகவுள்ளது. அது அடுத்த கட்டம் நோக்கி செல்வதை ஈழத்தமிழர்கள் முக்கியமாக கருதுகின்றோம்.
தமிழகம் முன்னேறினால் அது ஈழத்தமிழர்களுக்கு நிறைய வாய்ப்புக்களை உண்டாக்கும். ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை முழுமையாக புரிந்து கொண்டு இரண்டு தரப்பும் கைகோர்த்து செயற்படுமாக இருந்தால் நிச்சயமாக உலகத்தில் தமிழ்மக்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும்.

விஜய் முதன்முறையாக வந்திருந்தாலும் கூட பெருமளவு மக்களின் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளார். எனவே வளம் மிக்க தமிழகம் மாத்திரமல்லாமல் வளமான ஈழத்தை அமைப்பதற்கும் அவர் ஒத்துழைப்பார். ஒத்துழைக்க வேண்டும்.
கச்சதீவு விடயம் தொடர்பாக பேச வேண்டியது டில்லியும் கொழும்பும். கச்சதீவு தமிழகத்திற்கு சொந்தமாக வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது.
கச்சதீவு விடயம்
கடற்றொழிலாளர் பிரச்சினையும் அதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் பட்சத்தில் கச்சதீவு விடயம் காணாமல் போய்விடலாம். இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அங்கும் இருக்கிறார்கள். இங்கும் இருக்கிறார்கள்.
எனவே உறுதியான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்த விடயங்களில் புதிய முதலமைச்சர் இந்திய மத்திய அரசுடன் பேசி காத்திரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பு.

உச்சபட்சமான ஒரு சமஸ்டி அமைப்பு முறை என்பது தமிழ்மக்களின் இனப்பிரச்சனையை தீர்க்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எனவே நாடு பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்.
முதலீடுகளை இங்கு கொண்டு வரவேண்டுமாக இருந்தால் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு சமஸ்டி அரசியலமைப்பு அடிப்படையிலான தீர்விற்கு அவர்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.