இம்ரான் எம்.பி முன்வைத்த கோரிக்கைகள் - விரைவில் நடைமுறைப்படுத்துவதாக அதிகாரிகள் உறுதி
திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கடலரிப்பு விவகாரம், இராணுவத்தின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல் மற்றும் விவசாயிகளின் வரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருப் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று(16.07.2026) வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினரால் இப்பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட பிரேரணைகள்
இதன்போது, சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளின் விபரங்கள் வருமாறு,
1. கிண்ணியா - உப்பாறு கரையோர கடலரிப்பை தடுக்க அவசர நடவடிக்கை "கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கரையோரப் பகுதி மிக வேகமாக கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.
தற்போது இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதியானது 3-வது வீதியாகும். இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட இரண்டு வீதிகள் ஏற்கனவே கடலரிப்பினால் முற்றாகச் சேதமடைந்து கடலுக்குள் மூழ்கிவிட்டன.
எனவே, தற்போதைய வீதியும் சேதமடைவதற்கு முன்னர், கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு பாலம் வரையான பகுதியில் கடலரிப்பைத் தடுப்பதற்கான நிரந்தரத் தடுப்புச் சுவரினை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. சூரங்கல் இராணுவ முகாம் அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரிக்கை "கிண்ணியா சூரங்கல் பிரதான வீதியில் இரண்டு தனிநபர்களுக்கும், பள்ளிவாயலொன்றுக்கும் சொந்தமான 4 ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காணிகளுக்கு முன்னர் வாடகை செலுத்தப்பட்ட போதிலும், கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த காணியை இராணுவத் தேவைக்காகச் சுவீகரிப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர் வாடகை செலுத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அந்த வர்த்தமானியினை இரத்துச் செய்து, காணியை அதன் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அதற்குப் பதிலாகப் பொருத்தமான மாற்றுக்காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."
3. முத்துநகர் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு "நீண்டகாலமாக முத்துநகர் கிராமத்தில் குடியிருந்து, பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பல குடும்பங்கள் தற்பொழுது தங்குமிட வசதியின்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட அந்தக் குடும்பங்கள் மீண்டும் சுமுகமாக வாழ்வதற்கு ஏதுவாக, அவர்களுக்குக் குடியிருப்பதற்காக மாற்று இடங்களில் காணிகளை வழங்குவதற்கு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. ஜெயந்திபுர விவசாயிகளுக்கு வரி செலுத்த கால அவகாசம் வழங்குக! "கந்தளாய் பிரதேச செயலக பிரிவின் ஜெயந்திபுர கிராம சேவகர் பிரிவில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் விவசாய நோக்கத்திற்காக 58 பேருக்குக் காணிகள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும், கடந்த சில வருடங்களாக அவர்கள் வரி செலுத்தவில்லை எனக் கூறி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கான வட்டி மற்றும் வரிப்பணத்தை இம்மாத இறுதிக்குள் செலுத்துமாறு கந்தளாய் உதவி காணி ஆணையாளரினால் கடிதம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்தத் திடீர் உத்தரவு விவசாயிகளைப் பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.
எனவே, இந்த ஏழை விவசாயிகள் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால எல்லையை நீடித்துக் கொடுப்பதோடு, நிலுவைகளைச் சலுகை மற்றும் சகாய அடிப்படையில் தவணை முறையில் செலுத்துவதற்கும் ஆவணம் செய்ய வேண்டும்."
இந்த கலந்துரையாடலில் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்துக் கொண்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃருபினால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணைகள் தொடர்பில் ஆராய்ந்து தகுந்த தீர்வுகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்