இலங்கையில் பிரதான வைரஸ் பரவலாக மாறும் டெல்டா! - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் நாட்களில் நாட்டில் பிரதான வைரஸ் பரவலாக கோவிட் தொற்றின் டெல்டா திரிபு மாறும் அபாயமுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ இவ்வாறு கூறியுள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளில் தற்போது டெல்டா திரிபுபரவி வருவதை அடிப்படையாகக் கொண்டு இதனை கூற முடியுமென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டத்தில் திருப்தி அடைந்தாலும், தடுப்பூசியை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதில் தொடர்ந்தும் சிக்கல் காணப்படுகின்றது.
ஒவ்வொரு தடுப்பூசி வகையையும் மாகாண மட்டத்தில் வழங்குவதற்கு பதிலாக, அதன் செயற்றிறனுக்கமைவாகவும் அதிகபட்ச வயதை கருத்திற்கொண்டும் உலக நடைமுறைகளுக்கமைவாக வழங்குவதே சிறப்பானது என அந்த சங்கம் மேலும் கூறியுள்ளது.
இதேவேளை, நாட்டில் நாளுக்கு நாள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், பயணக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துமாறு சுகாதார தரப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவரும் வீரியம் கொண்ட டெல்டா திரிபு தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள, அனைவரும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே நாட்டில் டெல்டா திரிபு தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.