ஐ.நா. உதவிப் பொதுச்செயலாளருடன் பாதுகாப்புச் செயலாளர் முக்கிய பேச்சுவார்த்தை!
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்த, ஐ.நாவின் அரசியல் மற்றும் அமைதி காக்கும் விவகாரங்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் காலித் கியாரியுடன் முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற இந்த சந்திப்பு, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.
ஐ.நா. அமைதிப் படை நடவடிக்கைகளுக்காக இலங்கைத் துருப்பினரைப் பயிற்றுவிப்பது மற்றும் தயார்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள்
குறிப்பாக, பணியில் அமர்த்தப்படும் அனைத்து இராணுவத்தினருக்கும் பின்வரும் விடயங்களில் விரிவான பயிற்சிகள் வழங்கப்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

01. மனித உரிமைகள் விடயங்கள்: மனித உரிமைகள் தொடர்பான உரிய விசாரணை மற்றும் கொள்கைகள் குறித்த அறிவு.
02. சர்வதேச மனிதாபிமானச் சட்டம்: சர்வதேச போர் நடைமுறைகள் மற்றும் சட்டங்கள்.
03. மனித உரிமைகள் சட்டம்: அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சர்வதேச சட்ட விதிகள்.
இந்தப் பயிற்சிகள் ஐ.நா. அமைப்பின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதுடன், சர்வதேசச் சூழலில் தொழில்முறை ரீதியான ஒழுக்கத்தைப் பேணுவதை உறுதிப்படுத்தும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விதிமுறை மீறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கை
நிறுவப்பட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து இராணுவத்தினருக்குத் தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
அத்துடன், ஏதேனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் அவை குறித்து விசாரணை நடத்தும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மற்றும் தேசிய விசாரணை அதிகாரியின் பங்கு குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
தவறிழைக்கும் நபர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான குழுவினர் இந்தச் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணையில் அதிரடி தாக்குதல்! இருபுறமும் முகாமிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை