அவசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளமை மக்களின் ஜனநாயக குரலை ஒடுக்கும் செயல்: இரா.துரைரெத்தினம்
மக்கள் வீதிக்கு இறங்கிய நிலையில் ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தைக் குறிப்பிட்ட காலங்கள் வரையும் பிரகடனப்படுத்தி உள்ளது என்பது மக்களின் ஜனநாயக குரலை ஒடுக்குவதோடு, பொலிஸாரின் தன்னிச்சையான போக்குக்களையும், அரசபடையின் கண் மூடித்தனமான செயற்பாடுகளையும் ஜனாதிபதியின் சர்வதிகார ஆட்சியையும் திணிக்கும் செயலே என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப்(ப.ம) இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதியையும், பிரதமர் உட்பட குடும்பத்தார் அனைவரையும் இராஜினாமா செய்யுங்கள் என ஒருமாத காலமாக ஜனநாயக முறைப்படி எந்தவித வன்முறையும் இல்லாமல் மனித உரிமை எதையும் மீறாமல் நாடு பூராகவும் வெகுசன ரீதியான போராட்டங்களை மூவின சமூகங்களும் தனிநபராகவும், அமைப்பு ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் நடாத்தி வருவது நாம் அனைவரும் அறிந்த விடயமே.
ஒரு மாதகாலமாகியும் மக்களின் துன்ப துயரங்களுக்கு ஒரு முடிவின்றி மக்கள் பரிதவிக்கின்ற நிலையில், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுவதற்கு ஆட்சியாளர்கள் தவறு விட்டமை காரணமாக ஆட்சியாளர்கள் ஒதுங்கி மக்களின் துயர்களைத் துடைக்கக் கூடியவர்களின் கையில் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வழி விடுமாறு மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தைக் குறிப்பிட்ட காலங்கள் வரையும் பிரகடனப்படுத்தி உள்ளது என்பது மக்களின் ஜனநாயக குரலை ஒடுக்குவதோடு, பொலிஸாரின் தன்னிச்சையான போக்குக்களையும், அரசபடையின் கண் மூடித்தனமான செயற்பாடுகளையும் ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்சியையும் திணிக்கும் செயலே'' என குறிப்பிட்டுள்ளார்.
இதை தடுத்து நிறுத்த மக்கள் அணிதிரளாத பட்சத்தில் வீடுவீடாகச் சென்று
காணாமலாக்கப்படுகின்ற சம்பவங்கள் தொடரும். எனவே இதைத் தடுத்து நிறுத்த மக்கள்
அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.