முல்லைத்தீவில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்(photos)
முல்லைத்தீவில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட செயலக பேரவை மாநாட்டு மண்டபத்தில் நேற்று(20) மாலை 2.30 மணியளவில் நேரடியாகவும் இணையவழியூடாகவும் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
தீர்மானங்கள்
மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அந்தந்த பிரதேச செயலகங்களின் கண்காணிப்பின் கீழ் இயங்கும்.எனவே எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் வருகை தொடர்பான விடயங்கள் முகாமையாளரால் முன்கூட்டியதாக பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவர். எரிபொருள் வருகை மற்றும் விநியோகம் முதலிய தரவுகள் உத்தியோகத்தர்களால் பார்வையிடப்பட்டு அறிக்கையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விடயங்கள் அங்கு கடமையில் ஈடுபடும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்படும்.
பிரதேச செயலாளர்கள் தற்போதைய விவசாய அறுவடை காலம், மீன்பிடி நடவடிக்கைகள், பொதுமக்களின் அன்றாட தேவைகள் மற்றும் உத்தியோகத்தர்களின் தேவைகள் கவனத்திற் கொள்ளப்பட்டு அத்தியவசிய தேவைகளுக்கு முன்னுரிமையளித்து எரிபொருள் வழங்கும் விசேட பங்கீட்டு அட்டையினை விநியோகிப்பர்.
தற்போது அறுவடை காலமென்பதால் கமநல சேவை திணைக்களங்களத்திற்கு உட்பட்ட நிலையங்கள் ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டு அவர்களின் பயிர்நிலப்பரப்பு கவனத்திற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் எரிபொருள் விநியோகத்திற்கென விசேட பங்கீட்டு அட்டை அந்தந்த பிரதேச செயலகங்களினூடாக வழங்கப்படும்.
வாகன இயங்குநிலை தொடர்பான ஆவணங்கள் பார்வையிடப்பட்டு குடும்பமொன்றிற்கு மோட்டார் சைக்கிள் மற்றும் எதாவது
வேறு வாகனம் என்ற அடிப்படையில் இரு வாகனங்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்
திணைக்களம் சார்ந்த உத்தியோகத்தர்கள் அந்தந்த திணைக்கள தலைவர்கள் ஊடாக குறித்த பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பித்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த விசேட பங்கீட்டு அட்டைகள் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிற்கான தனித்துவ நிறங்களில் வழங்கப்படவுள்ளதுடன் இதனை பயன்படுத்தி வசிப்பிட பதிவுள்ள இடத்திலேயே எரிபொருளை பெறமுடியும். இந்த நடைமுறை ஊடாக சமையல் எரிவாயு நடைமுறையும் பின்பற்றப்படும்.
மேலும் இரவு வேளைகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முரண்பாடுகள் ஏற்படுகின்றமையை முகாமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு இரவு 8.00மணியுடன் விநியோகத்தினை இடைநிறுத்துவதாகவும்
தீர்மானிக்கப்பட்டது.
இந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமானது என்பதை சுட்டிக்காட்டிய மாவட்ட அரசாங்க அதிபர் இந் நடைமுறைகள் நேர்த்தியானதாக இருந்தால் முரண்பாடுகள் ஏற்படாது. என குறிப்பிட்டிருந்தார்.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் நேரடியாக பங்குபற்றினர்.
பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் இணையவழியூடாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.