வீதியில் காணும் விடயங்களுக்கு தீர்வு காணும் ஜனாதிபதி! எதிரணி குற்றச்சாட்டு
மக்களுக்கு தேவையான அன்றாட அத்தியவசிய உணவு பொருட்களை விநியோகிக்கும் முறை மாத்திரமல்லாது கமத்தொழிலாளர்களின் அறுவடைகளை விற்பனை செய்யக் கூடிய முறைகளை அரசாங்கம் உருவாக்காத காரணத்தினால் மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சரியான முகாமைத்துவம் இல்லாத நிலைமையில் அரசாங்கம் மீண்டும் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்களையோ கமத்தொழிலாளர்களையோ திட்டுவதால், இந்த பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நோய் பரவல் அதிகரித்த போது பயணக்கட்டுப்பாடுகளை விதித்து நோய் பரவுவதை குறைக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். எனினும் அரசாங்கம் பொருளாதாரம் பற்றிக் கூறிக்கொண்டு மக்களின் நோய் பரவல் நிலைமைய புறந்தள்ளி விட்டு, தீர்மானங்கள் எதனையும் எடுக்காமல் இருந்தது.
இறுதியில் நாங்கள் கூறியது போல் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நேரிட்டது. பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் போது மக்களுக்கு அன்றாடம் தேவையான உணவு பொருட்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் இருக்க வேண்டும்.
நுவரெலியா விவசாயிகளின் காய்கறிகளை விற்பனை செய்ய நேரம் செல்கிறது. அறுவடைகளை விற்பனை செய்ய அரசாங்கம் வேலைத்திட்டத்தை உருவாக்கவில்லை. கமத்தொழிலாளர்கள் தமது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாது கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
உணவு பொருட்களை விநியோகிக்க விரும்பும் வர்த்தகர்களுக்கு பிரதேச செயலக பிரிவின் எல்லைகளுக்குள் மாத்திரமே அனுமதி வழங்கப்படுகிறது.
அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்கவில்லை. அதற்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவில்லை.
ஜனாதிபதி மிரிஹானையில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு வரும் போது வீதியில் காணும் விடயங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. விஞ்ஞான ரீதியாக தீர்மானங்கள் எடுக்கப்படுவதில்லை எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
