விபத்தில் தந்தையும் மகனும் பரிதாப மரணம்: பேருந்து மீது பொதுமக்கள் தாக்குதல்(Video)
வவுனியா - குருக்கள் புதுக்குளம் பகுதியில் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
குருக்கள் புதுக்குளம் பகுதியில் மன்னார் பறயநாலங்குளம் பிரதான வீதியில் இன்று (06) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்து கொண்டிருந்த தனியார் பேருந்து குருக்கள் புதுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு ஏறிய மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகியதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இச்சம்பவத்தினால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் பேருந்தினை தாக்கியமையால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த பூவரசங்குளம் பொலிஸார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.
எனினும் அது பலனளிக்காத நிலையில் விசேட அதிரடிப்படையினர் களத்திற்கு அழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சம்பவத்தில் குருக்கள் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த பு.சிறிதரன் வயது 46மற்றும் அவரது 14 வயது மகனான டினோகாந் ஆகிய இருவரே மரணமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri