புல்மோட்டை- வலத்தாமலை சேற்றுப்பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு(Video)
திருகோணமலை-புல்மோட்டை வலத்தாமலை சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சடலம் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த சின்னவன் என்றழைக்கப்படும் ஜெமீல் நிஸ்வர் (21வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த பிரதேசத்தில் உள்ள சேற்றில் சடலமொன்று காணப்படுவதாக வயலுக்குச் சென்ற காவலாளியொருவர் குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சடலத்தைப் பார்வையிடுவதற்காகத் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.சாஹிர் சம்பவ இடத்துக்குச் சென்றதுடன் குறித்த சடலத்தைத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பிரேதப் பரிசோதனையை முன்னெடுக்குமாறு கட்டளையிட்டார்.
இருந்த போதிலும் தனது கணவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாக பொலிஸார் கைது செய்வதற்கு வீட்டுக்கு வந்ததாகவும் இதேவேளை அவர் தப்பி ஓடியதாகவும் இதனையடுத்து நானும் கணவரும் பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது யான் ஓயா பாலத்தை அண்மித்த பகுதியில் பேருந்தை மறைத்து தனது கணவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்டதாகவும் இதனையடுத்து கணவர் தப்பி ஓடியதாகவும் நீதவான் முன்னிலையில் மனைவி தெரிவித்தார்.
அத்துடன் தன்னை வாகனத்தில் ஏற்றிச் சென்று திரியாய் சந்தியில் வைத்தியசாலைக்கு அருகில் இறக்கிவிட்டு கணவர் வீட்டுக்கு வருவார் என பொலிஸார் கூறியதாகவும், இதேவேளை தனக்கு அருகில் நின்ற பொலிஸாரின் உடையில் சேறு இருந்ததாகவும் இதனால் தனது கணவரை பொலிஸார் துரத்தி சென்றமையினாலேயே சேற்றில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் மனைவி நீதிவான் முன்னிலையில் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் குறித்த சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த நீதவான் உத்தரவிட்டதுடன் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தினால் விசாரணைகளை முன்னெடுக்குமாறு திருகோணமலை மாவட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.