காத்தான்குடியை விளைச்சலால் அழகுபடுத்தும் பேரீச்சம் பழ மரங்கள்!
காத்தான்குடி, இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய பிரதேசங்களின் ஒன்றாகும். இது வெப்பமண்டல காலநிலை மற்றும் கடலோரப் பகுதியைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் காத்தான்குடியை அழகுபடுத்தும் (Beautification) நோக்கில் நடப்பட்ட பேரீச்சம் பழ மரங்கள் தற்போது காய்த்து குலுங்குவது பிரதேச மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
இறக்குமதி துறையில் முக்கிய உணவுப்பொருளாக காணப்படும் பேரீச்சம் பழங்கள் தற்போது இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
மட்டக்களப்பு காத்தான்குடி
குறிப்பாக மட்டக்களப்பு காத்தான்குடியில் வீதியில் நடுவே நாட்டப்பட்ட பேரீச்சம் மரங்கள், இம்முறை அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அண்மைக்காலமாக நாட்டில் நீடித்து வரும் கடுமையான வெப்ப சூழ்நிலையே பேரீச்சை மரங்கள் அதிக விளைச்சலைக்கொடுக்க காரணம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகளவில் இந்த பேரீச்சம் மரங்கள் கவர்ந்துள்ளன.
பேரிச்சம் பழங்களின் அறுவடை
இவ்வாறு காத்தான்குடி பிரதான வீதியில், காய்த்துக் குலுங்கும் பேரிச்சம் பழங்களின் அறுவடை விழா நேற்று நகரசபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி இவ்வறுவடை காலம், இப் பகுதியில் பெரும் வர்த்தக உற்சாகத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் தூண்டும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலப் பகுதியில் காத்தான்குடி பிராதான வீதியில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் பேரீச்சைம் மரங்கள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.