செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பு மக்கள் எதிர்நோக்கவுள்ள ஆபத்து
இலங்கை உணவு பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பில் உணவு முற்றாக தீர்ந்துவிடும் என கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் கொழும்பு நகரிலுள்ள 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உணவு நெருக்கடியின் அவசரகால நிலை
இலங்கையின் உணவு நெருக்கடி அவசரகால நிலைக்கு சென்றுள்ளதால் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தால் இயக்கப்படும் உணவு வங்கியிடம் நேற்றைய தினம் அவசர உணவு உதவியை கோரியுள்ளது.
இந்த நிலையிலேயே எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் கொழும்பில் உணவு முற்றாக தீர்ந்துவிடும் என கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பிலுள்ள மக்கள் தங்கள் வீட்டுத்தோட்டங்களில் அத்தியாவசிய உணவுப்பயிர்களை பயிரிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு மாநகர சபை ஆரம்பிக்கவுள்ள விவசாய திட்டம்
அத்துடன் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கான விவசாய திட்டத்தை கொழும்பு மாநகர சபை ஆரம்பிக்கவுள்ளதாக கூறினார்.
மேலும் கொழும்பிலுள்ள குறைந்த வருமானம் பெறும் 60 சதவீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவார்கள் என கூறிய அவர், தான் யாரையும் அச்சுறுத்தவில்லையென்றும், வரவிருக்கும் நெருக்கடி நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உணவு பாதுகாப்பு உறுதி
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலக உணவுத்திட்டம் உள்ளிட்ட பல அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பு நகரில் நாளாந்தம் 350 மெற்றிக் தொன் உணவு வீண்விரயம் செய்யப்படுவதாகவும் இது குறித்து கொழும்பு மாநரக சபை கவனம் செலுத்தவுள்ளதாகவும் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.