யாழ்.வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வால் விவசாய நிலங்கள் பாதிப்பு
யாழ்.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வால் 15 இற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இன்று (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே விவசாயிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில், விவசாயிகள், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி உணவத்து அம்மன் கோயிலை அண்டிய மக்களின் விவசாய நிலங்களில் போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான டிப்பர்களில் மணல் அகழப்பட்டுள்ளது.
மணல் அகழ்
போர் முடிவடைந்து மீளக்குடியேறிய காலத்திலும் இராணுவம் எமது விவசாய நிலங்களில் மணல் அகழ்ந்தார்கள்.அப்போது எம்மால் இதை தடுக்கமுடியவில்லை.
இதனால் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் 15 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளோம்.
சம்பவம் தொடர்பாக உரிய தரப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் எதுவித மாற்று நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
விவசாயிகள் கோரிக்கை
ஏனைய விவசாயிகள் தமது நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை செய்து பயன்பெறுகின்ற போதிலும் நாம் எந்தவொரு விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துவருகின்றோம்.
எமது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உரிய அதிகாரிகள் மாற்றுவழியை ஏற்படுத்தி தருமாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |