மக்கள் கோரிக்கை விடுத்தால் மகிந்த மீண்டும் வருவார்! கொழும்பில் இன்று வெளிப்படுத்தப்பட்ட விடயம்
மக்கள் கோரிக்கை விடுத்தால் மகிந்த மீண்டும் வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார்.
எனினும், மக்கள் அவரை மீள அழைத்தனர். அவரும் வந்து, ஆட்சியை பிடித்தார். எனவே, மக்கள் கோரினால் அவர் மீண்டும் வருவார்.
அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இணைந்து பயணிப்பதுதான் சிறப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் மகிந்த
பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் இரு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.
நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், மகிந்த விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன சுட்டிக்காட்டியிருந்தார்.
நாடாளுமன்றம் வந்த மகிந்த
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.