சீனாவை நோக்கி நகரும் சூறாவளி! அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்
தீவிர சூறாவளி சீனாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதைத் தொடர்ந்து, அங்குள்ள கடலோரப் பகுதிகளில் இருந்து 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜப்பான் மற்றும் தாய்வான் நாடுகளைக் கடந்து வந்துள்ள இந்தச் சூறாவளி, தற்போது சற்றே பலவீனமடைந்திருந்தாலும், அதன் மேகக்கூட்டங்கள் அதிகப்படியான ஈரப்பதத்தைக் கொண்டுள்ளதால் பெருமழை மற்றும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக, சீனாவின் கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் இருந்து 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களும், அண்டை மாகாணமான புஜியானில் (Fujian) இருந்து 1 இலட்சம் மக்களும் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை
இந்தச் சூறாவளி நாளை(12.7.2026)அதிகாலையில் சீனாவின் மக்கள் அடர்த்தி மிகுந்த வென்ஜோவ் நகருக்கு அருகில் கரையைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சீன தேசிய வானிலை மையம் இரண்டாவது மிக உயர்ந்த 'ஒரஞ்சு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் படகுப் போக்குவரத்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு நடவடிக்கை
ஏற்கனவே 'மேசாக்' புயலின் தாக்கத்தில் இருந்து மீளாத சீனாவிற்கு, இந்த 'பாவி' சூறாவளி மேலும் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

தற்காப்பு நடவடிக்கையாகப் பல்லாயிரக்கணக்கான மீட்புப் படையினர் தற்போது தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.