இலங்கையில் கடுமையாகவுள்ள வரி அறவிடல் செயற்பாடுகள்! சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வரி அறவிடல் செயற்பாடுகள் கடுமையான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவித் திட்டம் 2027-மார்ச்சில் முடிவடைய உள்ளது.
இந்தக் காலக்கெடுவுக்குள் நாட்டின் வரி நிர்வாகத்தை முழுமையாகச் சீர்திருத்துமாறு இலங்கையின் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் சபைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதித் துறை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
அதன் பிரகாரம் வரி விகிதங்களை மாற்றுவதற்குப் பதிலாக, வரி ஏய்ப்பாளர்களையும் வணிகங்களையும் டிஜிட்டல் முறையில் சிக்க வைப்பதே ஒரே தீர்வு என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்துகிறது.

அதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் சுங்கத்திணைக்களமும் கைகோர்த்துச் செயற்படவுள்ளன.
இலங்கையில் பிரதான வரி அறவிடல் நிறுவனங்கள் தங்களுக்குள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டதுதான் இதுவரை இருந்த மிகப்பெரிய பலவீனம் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுங்க நடவடிக்கைகள்
அதன் காரணமாக இனிவரும் காலங்களில் சுங்க மோசடி மற்றும் வரி ஏய்ப்பைத் தடுக்க பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் காகிதமில்லா சுங்க நடவடிக்கைகள் மற்றும் ஒரு புதிய கலால் வரி முகாமைத்துவ அமைப்பு என்பனவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.