வவுனியாவில் சீரற்ற காலநிலை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (Photos)
வவுனியாவில் சீரற்ற காலநிலையினால் 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் பாதிப்பு வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கே.ரத்நாயக்கே தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் சீரற்ற காலநிலை தொடர்பாக இன்று (09 ) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குபட்ட இராசேந்திரம் பகுதியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த பத்து பேரும், ஆசிகுளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும், மருதமடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும், கல்மடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் என 6 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச பிரிவுக்குட்பட்ட பிரபமடு பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும், அவசலபிட்டிய பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், அலகல்ல பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் என 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையால் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் மூன்று வீடுகளும், வவுனியா பிரதேச செயலக பிரிவில் நான்கு வீடுகளும் என 7 வீடுகள்பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலையுடன் கூடிய காலநிலமை காணப்படுவதினால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எதேனும் அனர்த்தம் இடம்பெற்றால் அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொலிஸ் நிலையம், கிராம சேவையாளர் அல்லது பிரதேச செயலகங்களுக்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக செட்டிக்குளம் - பூவரசங்குளம் பிரதான வீதியின் குறுக்கே மரம் வீழ்ந்தமையினால் அப்பாதையூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இதனையடுத்து செட்டிகுளம் பிரதேச சபையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வீதியில் வீழ்ந்திருந்த மரம் அகற்றப்பட்டதுடன், அப்பகுதியூடான போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியிருந்தது.
மேலும், வவுனியா நகரிலுள்ள உணவகம் ஒன்றின் அருகில் இருந்த மரமொன்றும் வீழ்ந்தமையினால் மரத்தின் கீழ் நின்ற மோட்டார் சைக்கிலொன்றும் பகுதியளவில் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பப்பாசி செய்கை அழிவு
மண்டோஸ் புயலின் தாக்கம் காரணமாக வவுனியாவில் 800க்கும் மேற்பட்ட பப்பாசிகள் அழிவடைந்துள்ளன.
இவ் அனர்த்தம் காரணமாக வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்த குளம், நெடுங்கேணி போன்ற பகுதிகளிலேயே பயிரிடப்பட்டு அறுவடை நிலையில் காணப்பட்ட 800க்கும் மேற்பட்ட பப்பாசி மரங்களே முறிந்து வீழ்ந்துள்ளதுடன் இவ் பலத்த காற்றின் காரணமாக வாழை மரங்கள் தென்னை மரங்கள் மற்றும் மரமுந்திரகை மரங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.
இதேவேளை வவுனியாவில் மண்டோஸ் புயலின் தாக்கம் காரணமாக 07 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 09 குடும்பங்களை சேர்ந்த 29 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.