கோட்டா கோ கமவின் தற்போதைய நிலைமை: விரக்தியில் பேசும் பிக்கு
காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டகளத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வெளியேறுமாறு கடந்த 5ஆம் திகதி பொலிஸார் போராட்டகாரர்களுக்கு அறிவித்திருந்தனர்.
எனினும் சட்டத்தை நடைமுறைப்படுத்தாது எதிர்வரும் 10ஆம் திகதி வரை கோட்டா கோ கமவில் இருக்கும் சட்டவிரோத நிர்மாணிப்புகளை அப்புறப்படுத்த போவதில்லை சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாக்குறுதியளித்தார்.
போராட்ட களத்தில் இருந்து வெளியேறிய அணிகள்
இவ்வாறான நிலைமையில், ஆரம்பத்தில் இருந்து கோட்டா கோ கம போராட்ட களத்தில் இருந்த பெரும்பாலான அணிகள் அங்கிருந்து வெளியேறிவிட்டன.
தற்போது போராட்டகார்கள் நிர்மாணித்த சுமார் 15 கூடாரங்கள் மாத்திரமே கோட்டா கோ கமவில் உள்ளன.
இதனிடையே நாளைய தினம் போராட்ட களத்திற்கு மக்கள் வரவில்லை என்றால், தான் உள்ளிட்டோரும் போராட்டகளத்தில் இருந்து வெளியேற போவதாக இதுவரை அங்கு தங்கியிருக்கும் தம்ம சுஜாத தேரர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதியில் இருந்து இதுவரை போராட்டகளத்தில் நடந்த அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தோம். போராட்ட களத்தில் ஆரம்பத்தில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் இருந்தனர்.
மக்கள் வரவில்லை என்றால் நாங்களும் வெளியேறி விடுவோம்
தற்போது எத்தனை பேர் இருக்கின்றனர் என்று பாருங்கள். அமைப்பு ரீதியான மாற்றம் வேண்டும் என கூறி வந்தவர்கள் உண்மையில் தமது கட்சியை அரசாள வைக்கவே வந்தனர் என்பதை நாட்டு மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் அடிப்படை நோக்கமாக இருந்துள்ளது.
நாளைய தினம் போராட்டகளத்தில் இதுவரை நடத்தி வந்த போராட்டத்தின் பிரதிபலன் கிடைக்கவில்லை என்றால், நாங்களும் இதனை நாளையுடன் முடித்துக்கொள்வோம்" எனவும் தம்ம சுஜாத தேரர் கூறியுள்ளார்.